முப்பத்து மூவாயிரம் நன்றிகள்

முப்பது வருடங்களைக்  கடந்து நிற்கும் இந்த தருணத்தில், சற்றே பின்னோக்கி நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன். வலி, விரக்தி, மகிழ்ச்சி, வறுமை, கல்வி, பள்ளி, கல்லூரி, சந்தோஷம், அழுகை, வேதனை, கோபம், சண்டை, உறவுகள், நண்பர்கள்..... இப்படிப் பல விஷயங்கள் மனக்கண்ணில் விரிகிறது.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. 
 
பலருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நன்றியும் நீதியைப் போலத்தான். Justice Delayed is Justice Denied என்பது போல நன்றியையும் உடனுக்குடன் தெரிவித்துவிடவேண்டும். நீங்கள் போன மாதம் செய்த உதவிக்கு நன்றி என்று சொன்னால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். இவ்வளவு சொல்கிற நானே, காலம் தாழ்த்தித் தான் நன்றி சொல்கிறேன். நாட்கள், மாதங்கள் இல்லை. சில பல வருடங்கள் கழித்து நன்றி சொல்கிறேன்.

முதலாவது நன்றி இறைவனுக்கு.

நான் ஒன்றும் பெரிதாய் சாதித்துவிடவில்லை என்றாலும், வாழ்வில் இந்த இடத்தை அடைய உறுதுணையாய் இருந்த என் அப்பா, அம்மாவுக்கு நன்றிகள்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.


இந்த இரண்டு விஷயங்களில் நான் அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளேனா என்பது சந்தேகமே. 

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

அப்பாவைப் பொறுத்தவரை, தன்னால் இயன்ற அளவிற்கு என்னை அவையத்தில் முந்தி இருக்க முயற்சி செய்தார். ஆனால் நானோ, பள்ளியில் ஆவரேஜ் மாணவன் தான். அதிலும் கணக்கு சுத்தம். பாரதியார்  சொன்னது போல "கணக்கு எனக்கு மனக்கு பிணக்கு ஆமணக்கு". எப்படியோ பள்ளி முடித்து கல்லூரி சென்று இரண்டு டிகிரியும் முடித்தாகிவிட்டது.

2005 பிற்பகுதியிலிருந்து 2008 ஜூன் வரை சென்னை வாசம். ஆரம்பத்தில் உறவினர் ஒருவரது வீட்டில், பின்னர் பால் சுகந்தி மேன்ஷனில் (காதல் படம் எடுத்த அதே மேன்ஷன்), அதன் பிறகு சைதாபேட்டை மேன்ஷன், பிறகு அசோக்நகரில் வீடு, கடைசியாய் மவுண்ட் ஸ்டேஷன் அருகில் ஒரு வீடு.

2005இல் ஏ.ஜி.எஸ் எனும் பைப் கம்பெனியில் பார்ட் டைம் வேலை. சென்னையின் நீள அகலங்களை நடந்தே அளந்த காலம் அது. நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இல்லாமல் இருந்திருந்தால் நடந்தே தேனிக்குப் போயிருப்பேன். 2006 ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஜாக்கிசானின் The Myth படம் ரிலீஸ் ஆகியிருந்தது. நண்பர்கள் கிட்டத்தட்ட 20 பேர் சென்றிருந்தோம். படம் பார்த்துவிட்டு சத்யம் தியேட்டரில் இருந்து புரசைவாக்கம் நண்பர் வீடு வரை நடந்தே சென்றது இன்னும் நினைவலைகளில் உள்ளது.

சென்னையில் அதிகம் சுற்றிய பகுதிகள் சைதாபேட்டை, புரசைவாக்கம், வேளச்சேரி, மேற்கு மாம்பலம் தான். நண்பர்களும் உறவினர்களும் இருந்தபடியால் அவர்கள் வீட்டிற்க்கு சென்று தான் பல இடங்களை தெரிந்துகொண்டேன்.

வேலை தேடி அலைந்துகொண்டிருந்த சமயம் அது. பல கம்பெனிகள். பல இண்டர்வியூக்கள். ஒன்றும் வசப்படவில்லை. சதீஷ் மூலமாக முதல் வேலை கிடைத்தது. சதீஷின் நண்பர் ரவிக்குமார் உதவியுடன், இண்டர்வியூ முடித்து 2006 அக்டோபர்-இல் Citigroup (முன்னாள் eServe இந்நாள் TCS) இல் சேர்ந்தேன். ஸ்பென்சரில் ஆபீஸ். நல்ல வேலையும் சொல்லிகொள்ளும்படியான சம்பளமும் வந்தது.

அப்போது எனது அலுவலக நண்பராக வந்தவர் தான் பிரசாத். நான் மாம்பலத்திலும் சைதாபேட்டையிலும் தங்கியிருந்தபோது ஆபீஸ் போவதற்கு எனக்கு அவர் தான் சாரதி. வயது வித்தியாசமின்றி பழகக்கூடிய நல்ல மனிதர். அவரது தாயாரின் மறைவு சற்றே அவரை அசைத்துப் பார்த்தது. சிறிது நாட்களில் தேறி விட்டார். சென்னையில் இருந்து கடலூர் திருவயிந்திபுரம் வரையில் அவரது பைக்கில் சென்று ஆண்டவன் ஸ்வாமிகளை சேவித்தோம். என்னை அழைத்து செல்ல அவருக்கு எந்த அவசியமும் இல்லை. ஆனாலும் செய்தார். எனது நெடுந்தூர பைக் பயணங்களில் அதுவும் ஒன்று.


ஸ்பென்சர். ஆபீஸ், நண்பர்கள், அவர்களை கலாய்ப்பது (KYC - Know Your Colleague), சரவணபவன் என்று மகிழ்ச்சியாக இருந்த காலம் அது. நான்  வேலை செய்துகொண்டிருந்த யூனிட் மூடப் போவதாக தகவல் வந்தது. மீண்டும் வேலை தேடும் படலம். ஒருநாள் பிரசாத் என்னிடம், ஃபாரின் வேலைக்குப் போறியா? என்று கேட்டார். நான் ரெடி. ஆனா யார் நமக்கு ஃபாரின்-ல வேலை தர ரெடியா இருக்காங்க? என்று சொன்னேன்.

இரண்டொரு நாளில் தி.நகரிலிருந்த ஒரு ரூப் டாப் ஹோட்டல் பார்ட்டியில் தான் பிரசாத் என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் பெயர் திரு. முரளீதரன். அவர்தான் எனது வாழ்கையின் முக்கியமான நகர்வை நிர்மாணிக்கப் போகிறவர் என்று அப்போது தெரியாது.


பஹ்ரைனில் நான் இப்போது வேலை செய்துகொண்டிருக்கும் நிறுவனத்தில் தான் அவரும் வேலை செய்துகொண்டிருந்தார். விடுமுறைக்காக சென்னை வந்திருந்தார். அப்போது நிகழ்ந்தது தான் எங்கள் சந்திப்பு. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு மிக அருகில் தான் அவரது வீடு. நானும் பிரசாத்தும் ஒருநாள் அவர் வீட்டிற்க்கு சென்றிருந்தோம். எனது ரெஸ்யூம் வாங்கிக்கொண்டார். "நான் பஹ்ரைன் போனதும், மெயில் பண்றேன்" என்று சொன்னார்.

சொன்னபடியே பஹ்ரைன் வந்ததும் எனது ரெஸ்யூமை MD-யிடம் கொடுத்துள்ளார். இரண்டு மூன்று தினங்களுக்குள் எனக்கு போன் வந்தது. MD-யே அழைத்தார். சிலபல கேள்விகள் கேட்டார். தெரியாததை தெரிந்தது போலக் காட்டிக்கொண்டேன் (அது தானே இண்டர்வியூ). வேலை கன்பார்ம். சிலதினங்களில் விசாவும் டிக்கெட்டும் அனுப்பி வைக்கிறேன் என்றார் முரளி சார்.

2008 ஜூன் 30-ஆம் தேதி பஹ்ரைனுக்கு வந்து சேர்ந்தேன். ஜூலை 1-ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன். இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறேன். Slow and steady wins the race என்பது போல, கொஞ்சம் கொஞ்சமாக, ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான நிலையை எட்டியிருக்கிறேன் (என நினைக்கிறேன்).

2010-இல் திருமணம். மனைவியின் பெயரை பாஸ்போர்ட்டில் பதிவு செய்வதற்காக இந்திய தூதரகம் சென்றிருந்தேன். எந்தவொரு விஷயமும் கேட்காமலே கிடைத்தால் அதன் அருமை தெரியாது. அழுதால் தான் குழந்தைக்கும் கூட பால். போலே, என்னை திரு.சுந்தரராஜன் கண் விட்டார். சத்-சங்கம் எனும் பாலைப் பருகி நானும் காதினால் கேட்டு, வாயினால் பாடி, மனத்தினால் அந்த இறைவனைப் பற்றி சிந்திக்க வேண்டி. திரு. சுந்தரராஜன் தனது வேலையை செவ்வனே செய்து, எனக்கும் கொஞ்சம் ஆன்மீகத்தின் ருசியைக் காட்டிவிட்டார்.

மேலே சொன்னவர்களைத் தவிர எனது கல்லூரி(HKRH) நண்பர்கள் மற்றும் திரு. ராஜா, திரு. பச்சையப்பன், பஹ்ரைன் நண்பர்கள் திரு. சரவணன், திரு. ரெங்கநாதன் போன்றோரும் பல வகைகளில் (எனது தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்சனைகள் உள்பட) உதவி உள்ளனர்.

இவர்களுக்கு எல்லாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. 

இப்போதைக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
 
நன்றி! (NANDRI!) | logeugene

Comments

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2