CIO - சென்சஸ்

நேற்று காலை முதல் இப்படி  ஒரு எச்சரிக்கை மெசேஜ் வாட்சாப்பில் சென்னை மழையை விடவும் பயங்கரமாக கொட்டிக்கொண்டு இருந்தது.

தனி மனிதர்கள், க்ரூப் என பாகுபாடின்றி பலரிடம் இருந்து வந்துகொண்டிருந்தது. மெசேஜைப்  படிச்சேன்.. நானும் ரவுடி தானே.. என் பங்கிற்கு நானும்  பலருக்கும் பல க்ரூப்களுக்கும் பார்வேர்டினேன். ஆனா அதை ஒன்னும் அத்தனை பெருசா எடுத்துக்கல.

அதனால வாட்ஸாப் ஆத்தா எனக்கு லைட்டா பாடம் புகட்ட நினைச்சு, சாயங்காலமே ஒரு சம்பவத்தை நடத்திட்டா.

வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலயே இண்டர்காம் பெல் சத்தம் கேட்டது. தங்கமணி தான் எடுத்தார். யார் நீங்க? எந்த ப்ளாட்? என்றெல்லாம் கேட்டுகொண்டிருந்தார். சரியா பதில் சொல்லலை-ன்னா கதவை திறக்காத என்று நான் சொன்னேன். உடனே இண்டர்காமை என்னிடம் கொடுத்துவிட்டார். எதிர்முனை ஆசாமியிடம் யார் நீ? எந்த ப்ளாட்-க்கு போகணும்? எதுக்கு-ன்னு விடாம கேள்வி கேட்டுட்டு இருந்தேன்.

சென்ட்ரல் இன்பர்மேடிக்ஸ் ஆர்கனைசேசன்-ல (CIO) இருந்து வந்திருக்கேன். உன்கிட்ட பேசணும்-னு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தான். (பழைய)காக்கிசட்டை, குருதிப்புனல், வேட்டையாடு விளையாடு எல்லாப் படத்திலருந்தும் கொஞ்சம் கொஞ்சம் கமல் வந்து என் மூளைக்குள்ள எதுவோ சரியில்லை-னு சொன்னார். அதனால அவன் பேசிட்டு இருக்கும்போதே இண்டர்காமை துண்டித்தேன், கதவை திறக்காமலே (கொஞ்சம் கூட பயப்படவில்லை என்பதை கவனிக்க).

உடனே வாட்ச்மேனுக்கு போன் பண்ணினேன். அவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னிடம் இண்டர்காமில் பேசிய அதே குரலும் அவருடன் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. ஐயயோ! வேறு யாரோ அவனுக்கு மெயின் டோரை திறந்து விட்டுடாங்களே..

வாட்ச்மேனிடம், அண்ணே, அந்த ஆளை உள்ள விடாதீங்க. அவன் யாருன்னே தெரியல. கவர்மெண்ட்-ல இருந்து வரேன்-னு சொல்றான். ஐடி கார்டை வாங்கிப் பாருங்க. மணி இப்போ 7 ஆயிடுச்சு. இந்த ஊர்ல 2-3 மணிக்கு மேல அரபி ஆபீஸ்லயே வேலை பாக்கமாட்டான். வீட்டுக்கா வந்து வேலை பாக்கப்போறான்? அதனால கண்டிப்பா இவன் வேற எதுக்கோ தான் வந்திருக்கான். உள்ள விடாதீங்க-னு சொன்னேன்.

சார், அவன் என்கிட்டே கடுப்பா பேசறான் சார். நீ யாரு? என்கிட்ட எதுக்கு இவ்வளவு கேள்வி கேக்கற? இந்த பில்டிங்-ல யார் இருக்காங்க? எல்லார் வீட்டுக்கும் போகணும்-னு சொல்லிட்டு ஏற்கனவே மேலதான் வந்துட்டு இருக்கான் சார்-னு சொல்லிட்டு, உடனே போனை வைத்துவிட்டார்.

அவ்வளவுதான்.. உடனே கதவைப் பூட்டினேன். கதவுக்கு முட்டுகுடுக்க சோபாவை நகர்த்த தயாரா நின்னுட்டு இருந்தேன். நிசப்தம். திடீர்-னு கீழ வேற யார் வீட்டு கதவோ திறக்கற சத்தம் கேட்டது. அப்பறம் திரும்பவும் நிசப்தம்.

டிங் டாங்.. என் வீட்டு காலிங்பெல். தங்கமணி பின்ஹோல் லென்ஸ் வழியாக பார்த்து பரபரப்பாக கதவை திறந்தார். கீழ்வீட்டுப் பெண்மணி அரக்கப்பரக்க மூச்சு வாங்கியபடி நின்றிருந்தார். என்னங்க ஆச்சு-னு தங்கமணி கேட்டுக்கொண்டிருக்கும்போதே இந்தாங்க என்று முகத்திற்கு நேராக, முந்தாநாள் வாங்கிட்டுப் போன கரண்டியை நீட்டினார். (அதைக் கொடுக்கத்தான் படியேறி வந்து மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்) கரண்டியைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு, உடனே உள்ள வந்திருங்க.. இல்லாட்டி உங்க வீட்டுக்கு போயிடுங்க-னு சொன்னார். அவருக்கு விளங்கவே இல்லை.

அவருக்கு நடந்தவற்றை எடுத்து சொல்லவும், ஆமாம். நீங்க இண்டர்காம்-ல பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன் என்று சொன்னார் (மொத்த பில்டிங்கும் கேட்டிருக்கிறது என்று பின்னர் தான் தெரிந்தது). இதற்குள் அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டனர்.
யார் வீட்டிலிருந்தோ கதவை திறக்கப் போராடும் சத்தம் கேட்டது. அனைவரும் கலவரமானோம். கரண்டி பெண்மணி நிதானமாக "எங்க வீட்ல இருந்து தான் சத்தம் வருது. என் பொண்ணு தான் உள்ள இருந்து திறக்க ட்ரை பண்றா" என்று சொன்னார். கொஞ்சம் ரிலாக்ஸ்.

இதற்கிடையில் அந்த CIO ஆசாமி ரெண்டாவது தளத்தில் இருந்த ஒருத்தர் வீட்டுக்கு போயிட்டான். 5 நிமிஷம் ஆச்சு.. 10 நிமிஷம் ஆச்சு... சத்தமே இல்ல. வாட்ச்மேனை என்ன ஆச்சு-னு போய் பாருங்க-னு சொன்னேன். அவர் சர்வ ஜாக்கிரதையாக 3 அடி தள்ளி நின்று அந்த வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினார். எப்போது வேண்டுமானாலும் தெறித்து ஓடி-விடக்கூடிய பாடி லேங்குவேஜில் நின்று கொண்டிருந்தார்.
வீட்டுக்காரர் கதவை திறந்து வெளியே வந்தார். நடந்த கலவரத்தை சற்றும் உணரவில்லை. வாட்ச்மேனிடம் என்ன என்று கேட்டார். இவர் தயங்கி தயங்கி, "இல்ல உங்க வீட்டுக்கு வந்திருக்கற ஆளு யாருன்னு தெரியுமா?" என்று கேட்டார். அவர் கூலாக "அவரா, அவர் சென்சஸ் கணக்கு எடுக்க வந்திருக்கார். ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.

இப்போது கலவரம் இன்னும் ஜாஸ்தி ஆனது. சென்சஸ் கணக்கு எடுக்கறவன் எதுக்கு வீட்டுக்கு வரணும்? அதான் எல்லாரோட ஜாதகமும் கம்ப்யூட்டர்-ல இருக்குமே என்று சந்தேகம். ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொல்லிட்டு இருந்தாங்க. 30 நிமிஷம் கழிச்சு ஒரு வழியா அந்த ஆள் கெளம்பிட்டான். முதல் ஆளா தங்கமணி அவங்க வீட்டுக்குப் போயி என்ன ஏது-னு  விசாரிக்க ஆரம்பிச்சாங்க. ஒவ்வொருத்தரா உள்ள போனோம். அவங்களுக்கு, CIO ஆசாமியை விடவும், எங்களைப் பாத்து தான் பயம் வந்திருக்கும். பத்துப் பேர் மொத்தமா வந்தா பயம் வராதா பின்ன?
பயப்பட ஒன்னும் இல்லை. 2-3 பார்ம் குடுத்துட்டு போயிருக்கான். நம்ம பெர்சனல் டீடெய்ல் எழுதி குடுக்கணுமாம். பாருங்க, CIO சீல் போட்ட Brochure-தான் குடுத்துட்டுப் போயிருக்கான் என்று சொன்னார். ஒருவாறாக சமாதானம் அடையும் அந்த நேரத்தில், "அந்த CIO ஆள்  ஒவ்வொரு வீட்டுக்கும் வருவான். நீங்க எல்லாரும் தான் இந்த பார்ம் எழுதி குடுக்கணும்" என்று அவர் பங்குக்கு ஒரு பிட்டை போட்டார்.
ஒவ்வொருத்தரா அவங்கவங்க வீட்டுக்குப் போனோம். வாட்ச்மேனை காணவே காணோம். எப்போ எஸ்கேப் ஆனார்-னு யாருக்குமே தெரியல. போன் பண்ணா, ஸ்விட்ச் ஆப்-னு வருது.
உங்க வீட்டு வாசல்லயும் CIO ஆள் வந்து நிப்பான். அப்பறம், என்ன நடந்துச்சு-ன்னு உங்க கதையை எழுதுங்க.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2