தரிகெட்டுப் போனேனே...

உள்ளங்கையில் 2 இடங்களில் காயம். வலது முழங்காலில் நல்ல சிராய்ப்பு. அங்கங்கே தசைப்பிடிப்பு. கைகால்களில் வலி. நான் ஏன் இப்படித் தரிகெட்டுப் போனேன்? காரணம் சிட்டி நாராயணனும், கோகுலனும் தான்.

பெரியவன் குங்பூ வேண்டாம். கிரிக்கெட்தான் பிடிக்கும் என்று சொன்னதிலிருந்து தொடங்கியது எனக்கு போதாத வேளை. வெள்ளிக்கிழமை காலைகளில் நண்பர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். பல நாட்களாக (வருடங்களாக) என்னை அழைத்தும் நான் பாராமுகமாய் இருந்துவிட்டேன். வியாழக்கிழமை பின்னிரவு 6 மணிக்கு (அதாவது வெள்ளி காலை 6 மணிக்கு) விளையாட அழைப்பார்கள். நித்ராதேவி சமேத சொப்பனேஸ்வரர் அருளாசியில் மூழ்கியிருக்கும் வேளையில் விளையாட அழைத்தால் பின்னே என்ன செய்வதாம்.. அதனால்தான் பாராமுகம்.

அதிலும் நடுவில் கொஞ்சம் காலமாக (ஜஸ்ட் 20 வருடங்கள் மட்டும்) கிரிக்கெட்டுடன் தொடர்பில் இல்லை. மற்றபடி நான் ஒரு ஸ்டார் பிளேயர். 8வது படிக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் விளையாட காலை டிபன் முடித்துவிட்டு களத்திற்கு(கிரவுண்ட்) சென்றேன். மதியம் சாப்பிட வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சென்றவன், சிக்ஸர் போர் என விளையாட்டு ஆர்வத்தில் மறந்துவிட்டேன். அம்மாவே 2 மணிவாக்கில் களத்திற்கு வந்து அழைத்தார். "நீ போ, நான் 5 நிமிஷத்தில் வரேன்" என்று சொல்லி அம்மாவை அனுப்பிவிட்டு மீண்டும் சிக்ஸர், போர்.


மாலை வீட்டிற்கு வரும்போது 6.15 ஆகிவிட்டது. அப்பா வாசலிலேயே உட்கார்ந்திருந்தார். அவர் பார்த்த பார்வையிலேயே பெரிய கலவரம் நடக்கப்போகிறது என்று உணர்ந்தேன். சைக்கிளை நிறுத்தினேன். அப்பா என்னிடம் எதுவும் பேசவில்லை. சைக்கிள் கேரியரில் வைத்திருந்த பேட்டை எடுத்து அருகிலிருந்த கரண்ட் கம்பத்தில் 2 அடி. பேட் சுக்குநூறானது. இனி கிரிக்கெட் விளையாடப் போனால், உனக்கும் இதேதான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். சிக்ஸ் போரா அல்லது உயிரா என்று வந்தபோது, உயிரே முக்கியமானதால், கிரிக்கெட் அத்தியாயத்திற்கு பெரிய முற்றுப்புள்ளி. ஒரு ஸ்டார் பிளேயர் வாழ்வில் கிரிக்கெட்டிற்கு இப்படியும் ஒரு சோதனை.

ஆனால் இப்போது பெரியவன் கிரிக்கெட் தான் வேண்டுமென்று சொல்லிவிட்டான். முதலில் கிரிக்கெட் என்றால் என்ன, எப்படி விளையாடுவார்கள் என்று காட்ட (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்), ஒரு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 5.45 மணிக்கே எழுந்து அவனையும் எழுப்பிக்கொண்டு கிளம்பினேன். மீண்டும் எனக்குள் இருக்கும் ஸ்டார் பிளேயருக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

இந்த கிரிக்கெட் விளையாட வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை உண்டு. லைசன்ஸே இல்லாமல் கார் ஒட்டிக்கொண்டு வந்த ஒருவர், காலையில் எழுந்து பூனை மாதிரி சத்தமே இல்லாமல் வீட்டிலிருந்து கிளம்பும் ஒருவர் (சத்தம் கேட்டால் பிள்ளைக்கு பால் காய்ச்சுங்க, வெந்நீர் போடுங்க என வீட்டிலேயே க்ளீன் போல்ட் ஆகிவிடுவார்), இஞ்சி டீ, மசாலா மோர், சமயத்தில் புளியோதரை தயிர்சாதம் என புட் கோர்ட்டையே கிரவுண்டுக்கு கொண்டுவரும் கோகுலன், தங்கமணியே எழுப்பிவிட்டு கிரிக்கெட் விளையாட அனுப்பும் சிட்டி நாராயணன், விளையாட அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை நாமளே செய்யவேண்டியிருக்கே எனத் தனியே புலம்பும் கோகுலன் மற்றும் ஸ்ரீராமின் தங்கமணிகள், என பல பல கதைகள்.


சரி.. நம்ம கதைக்கு வருவோம். இப்படியாக பெரியவனுக்கு கிரிக்கெட் விளையாட்டை வேடிக்கை காட்டுவதற்குப் போன என்னை, சிட்டி நாராயணனும் கோகுலனும் விளையாட்டாக விளையாட்டில் இழுத்துவிட்டார்கள். எனக்குள்ளிருந்த ஸ்டார் பிளேயரும் வற்புறுத்தவே நானும் ஒப்புக்கொண்டேன் (வழியனுப்ப வந்தவனை வண்டில ஏத்தி விட்டீங்களேடா). பீல்டிங் மட்டுமே செய்ததால் முதல் வாரம் எல்லாம் நல்லபடியாகவே போனது. 2வது வாரம் ஒரு ரன் அவுட், ஒரு கேட்ச் என ஸ்டார் பிளேயர் கலக்கினான்.

மூன்றாவது வாரம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, எனக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டார் பிளேயர் இது ஒரு பெரிய கம் பேக் என எண்ணி சிறப்பாக விளையாடினான். 3 முறை பந்து பேட்டில் பட்டது (கவனிக்க.. அதுவாகப் பட்டது. நானாக எதுவும் செய்யவில்லை) முறையே மூன்று முறையும் 2 ரன்கள் ஓடினோம். ஸ்டார் பிளேயருக்கு லைட்டாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. ஆனாலும் வெளிக்காட்டாமல் கெத்தாக நின்றேன்.

4வது முறை பந்து பேட்டில் பட்டது. 1 ரன் ஓடினேன். 2வது ரன்னிற்கு ஓடச்சொல்லி எல்லாரும் கத்தவே, ஸ்டார் பிளேயர் ஓடினான். பாதி கிரவுண்டில் ஷூ வழுக்கி கீழே விழுந்துவிட்டேன். மீண்டும் எழுந்து ஓட முயற்சித்தேன்.. உடனே மீண்டும் விழுந்தேன். இதற்குள் ரன் அவுட் ஆக்கிவிட்டார்கள் (அப்பாடா ஒருவழியா அவுட்டாக்கி என்னை காப்பாத்திட்ட தெய்வமே).


(மீண்டும் முதல் பாரா படிக்கவும்...)

சிட்டி நாராயணன் & கோகுலன்.. சிங்கத்தை சொரிஞ்சு விட்டுடீங்க.. இனி வீறுகொண்ட ஸ்டார் பிளேயரை பார்ப்பீர்கள்... கிரிக்கெட் கிரவுண்டில் இனி காட்டாற்று வெள்ளம் பாயும்.. தடுக்க நினைத்தால் பந்துடன் சேர்ந்து நீங்களும் கத்தாரில் போய் விழுவீர்கள். அப்பறம்.. எங்க அப்பா மட்டும் கிரவுண்டு பக்கம் வராம பாத்துக்கோங்க...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2