எதிராத்து துளசி

எதிர் வீட்டுக்கு ஸ்ரீராம் மனைவி மக்களுடன் குடித்தனம் வந்திருக்கார். பேருக்கேத்தா போலவே, லவ குசா மாதிரி 2 ஆம்மனாட்டி பசங்க.

அவ்வப்போது வீட்டுக்கு வந்து போவார். அவர் வீட்டம்மணியும் எங்காத்து தங்கமணியும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டா. கேக்கவா வேணும்.. இவா லூட்டியில மொத்த பில்டிங்கும் ஏக களேபரம் தான்.

ஸ்ரீராமன் பேருக்கேத்தா மாதிரி ஏகபத்தினி விரதனா இருப்பார்-னு பாத்தா, அப்பறமாதான் தெரிஞ்சுது அவருக்கு எங்காத்து துளசி மேல ஒரு கண்-னு. துளசி அத்தனை அர்த்தபுஷ்டியா இல்லேன்னாலும், ஓரளவுக்காவது பாக்கற மாதிரிதான்.

ஒரு சமயம் அவர் துளசியைப் பாக்கறதை நான் பாத்துட்டேன். உடனே ஏதேதோ காரணம் சொல்லிட்டு கிளம்பிட்டார். அன்னிலேர்ந்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அதுக்கு அப்பறம் நான் இருக்கற சமயத்திலே வீட்டுக்கு வர்றதையே அவாய்ட் பண்ணிடுவார். வந்தாலும் 5-10 நிமிஷத்துக்கு மேல இருக்கறதில்லை. இந்த சின்ன சமயத்திலயும் துளசியைப் பாக்க அவர் தவறியதில்லை. அதை நானும் பாக்க தவறியதில்லை.

நான் கொஞ்சம் முறைச்சவுடனே புரிஞ்சுண்டு கிளம்பிடுவார். இதை இப்படியே விடக்கூடாது-ன்னு முடிவுபண்ணி, ஒருநாள் எங்காத்து தங்கமணிகிட்ட பேசினேன். "ஸ்ரீராமா.. இருக்கவே இருக்காது. அவர் அப்படிப்பட்டவர் கிடையாது"-னு சத்தியம் பண்ணாத குறையாக அவருக்கு பரிஞ்சு பேசினார். எதிர்த்து பேச முடியுமோ... விட்டுட்டேன்.

அடுத்தநாள் அவர் வந்திருந்த சமயம், துளசியைப் பாத்தார். இன்னிக்கு ரெண்டுல ஒன்னு பாத்துடனும்-னு முடிவு பண்ணேன். தங்கமணி பக்கத்துலயே இருந்தாலும், கொஞ்சம் தைரியத்தை வரவெச்சுண்டு.. "ஸ்ரீராம்.. இப்படி பண்றது உங்களுக்கு தப்பா படலையா?"-னு கேட்டேன்.

அது.. வந்து-ன்னு மென்னு முழுங்கினார். அப்பறம் அவரே பேச ஆரம்பிச்சார். "நானே உங்ககிட்ட துளசி பத்திப் பேசணும்-னு நினைச்சிருந்தேன். சந்தர்ப்பம் வாய்க்கலை"-னு ஆரம்பிச்சு அவர் பேச பேச எங்காத்து தங்கமணிக்கு ஒரே அதிர்ச்சி...

"ஸ்ரீராம் அண்ணா.. உங்களை என்னவோ-னு நினைச்சிருந்தேன். இவர் சொன்னப்போ கூட நான் நம்பலை.. நீங்க இப்படி பண்ணுவீங்க-னு நான் நினைச்சுக்கூட பாக்கலை"-னு தங்கமணி அழுகையும் கண்ணீருமா சொல்ல.. ஒரே கலவரம் தான்.

என்ன பெருசா தப்பு பண்ணிட்டேன்? துளசி செடி நன்னா வளந்திருக்கு.. பக்கத்திலே ஒரு நாத்து வந்திருக்கே, அதை குடுத்தா நான் எங்காத்துல ஒரு தொட்டியிலே வெச்சு வளத்துக்கறேன்-னு தேங்காய் ஓடைச்ச மாதிரி கேட்டுட்டார்..

இப்போ அந்த துளசி நாத்து, எதிராத்து தொட்டியிலே வளந்துண்டு இருக்கு... நான் அவராத்துக்கு போகும்போதெல்லாம் துளசியை வாஞ்சையுடன் பாத்துண்டு இருக்கேன்...

Comments

Popular posts from this blog

ஒரு சங்கீத(ப்ரயத்தன) பயணம்

குறுந்தாடி

முப்பத்து மூவாயிரம் நன்றிகள்