மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் என்ற பதத்தை நம்மில் பலர் கேட்டிருப்போம். ஆனால் நேரில் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவே.

அழகான சுந்தரகாண்டம் பாராயணமும் மதுரமான மதுரகவியாழ்வார் திருநக்ஷத்ரமும் ஒருசேர நடந்தது. நடந்து முடிந்த சென்னை பெங்களூரு IPL போட்டி போல, மெதுவாக தொடங்கி கடைசி ஸர்க்கம் நெருங்க நெருங்க பரபரவென ஓடி ஒரு ரன்னில் தோற்றது போல ஒருமணிக்கு முடிக்கவேண்டிய பாராயணத்தை ஒன்னேகால் சுமாருக்கு முடிப்போம். இதுவே வழக்கமாகிவிட்டபடியால் நம்ம ஆஞ்சி.. (அதாங்க ஆஞ்சநேயர்) நம் ஸ்வபாவம் தெரிந்து போகிற போக்கில் போகட்டுமென விட்டுவிட்டார்.

நண்பர் ஒருவர் மதுரமான பலாச்சுளைகளை பெருமாளுக்கு நைவேத்யம் செய்யக் கொண்டுவந்தார். தேனில் ஊறிய பலாச்சுளைகள் பெருமாளுக்கு உகக்குமோ இல்லையோ பாகவதர்களாகிய நமக்கு (சரி சரி.. பாபியான எனக்கு) உகக்குமே என்றெண்ணி உடனே தங்கமணியை தேன் வாங்கிவரச்சொல்லி பலாச்சுளைகளை ஊறப்போட்டு, பெருமாளுக்கு நைவேத்யம் செய்தாகிவிட்டது.

ஆனால் நீள்வெட்டாக இல்லாமல், குறுக்காக வெட்டி தேனில் ஊறப்போட்டு விட்டார்கள். சரி போகட்டும்.. தவறே செய்திருந்தாலும் சரணமடைந்தவர்களை மன்னிக்கவேண்டியது பலாச்சுளையின் பிரபாவம் ஆகையால் அவர்கள் ரக்ஷிக்கப்பட்டார்கள்.

பகவான் அமுதுசெய்துவிட்டால் அடுத்தது பாகவதர்கள் அமுது செய்யவேண்டியது தானே. இடப்பற்றாக்குறையால் சிலர் 2வது பந்திக்கு காத்திருந்த சமயத்தில் நம்ம மதுரை மூக்கர்  தன் மூக்கை விடவும் பெரியதான (பாதி நறுக்கியும்) ஒரு பலாச்சுளையை தேன் சொட்ட சொட்ட அங்கிருந்த அந்த "அவரிடம்" கொடுக்க, தேன் வழிந்து முழங்கை வரைக்கும் போய்விடுமோ என்ற பயத்தில் சுளையையும் சொட்டும் தேனையும் லாவகமாக வாயில் போட்டுக்கொண்ட பிறகுதான் தெரிந்தது, அது எத்தனை பெரிய சுளை, அதில் எவ்வளவு தேன் இருந்தது என்று..



மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்த அந்த வேளையில் கரெக்ட்டாக நான் என்ட்ரி கொடுக்க, என்னைப் பார்த்து விக்கித்து நிற்க நான் அடித்த கமெண்டுக்கு சிரிக்கவும் முடியாமல் புரையேறி இருமவும் முடியாமல் தும்மவும் முடியாமல் அவர் தவித்த அந்த தவிப்பு... லங்கையைக் கொளுத்திவிட்டு அசோகவனத்திலிருக்கும் சீதைக்கு என்னவாயிற்றோ என்று மனம் கலங்கிய மாருதியின் மனக்கிலேசத்தை கண்முன் நிறுத்தியது.. அந்த ஒருகணத்தில் ஒரு சோறு.. இல்லையில்லை.. ஒரு சுளை பதம்.

அதை போட்டோ எடுக்காமல் விட்டுவிட்டேனே என்று அவருக்கு மகிழ்ச்சியும் எனக்கு வருத்தமும் ஒருசேர தோன்றியது. அந்த "அவர்" யாரென சரியாகக் கூறும் முதல் மூவருக்கு, நமக்கே பறை தருவார்.. இல்லையில்லை.. பரிசு தருவார்.. அவர் பதி

இனி பாராயணம் தோறும் (நான்) பலாச்சுளை விழுங்க, சூரியனைப் பழமென்று விழுங்கப் போனவர் அருள்புரிய வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஒரு சங்கீத(ப்ரயத்தன) பயணம்

குறுந்தாடி

முப்பத்து மூவாயிரம் நன்றிகள்