தீபாவளி

தீபாவளி... தலை தீபாவளி கடந்து சில பல வருஷங்களானாலும் கூட இன்னும் மனசுல பசுமையா நிக்கிறது என்னவோ நம்ம சின்ன வயசு தீபாவளி தான்.

புதுத்துணி எடுக்க முடிவு செய்யறதுல ஆரம்பிக்கற தீபாவளி, தீபாவளியன்னிக்கு பட்டாசு அட்டைப் பெட்டி குப்பைகளை மொத்தமா கொளுத்தறதுல முடியும். மிச்சம் மீதி பட்டாசை எங்கம்மா எடுத்து ஒளிச்சு வெச்சிருந்தா, எப்போவாவது கார்த்திகை-ல முடியும்.

புதுத்துணி-ன உடனே ஏதோ கலர் கலரா துணி வாங்கப்போறோம்-னு நாம ஒரு கணக்குப்போட்டு வெச்சிருப்போம். ஆனா ஸ்கூல் யூனிஃபார்ம் தான் பல தீபாவளிகளுக்கு புதுத்துணியா கிடைச்சிருக்கு. சமயத்துல எக்ஸ்ட்ராவா ஒரு கலர் சட்டை கிடைக்கும். அந்த தீபாவளியெல்லாம் அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதுவும் நாம கேக்கற பட்டாசெல்லாம் வாங்கி கொடுத்துட்டா, அவ்வளவு தான். கைலயே புடிக்க முடியாது.



அப்போல்லாம் பட்டாசு கிப்ட் பாக்ஸ் இல்லாத சமயம். நாமளே பாத்து பாத்து பட்டாசு வாங்கலாம். நம்ம டேஸ்டுக்கு (என்ன பட்டாசை நக்கிப் பாத்தா வாங்குவ-ன்னு கேக்கறவன் வீட்டுக்குள்ள, தெரு பயலுக எல்லாரும் ராக்கெட் விடுவான்) தகுந்தமாதிரி மத்தாப்பு கம்மியாவும், வெடிக்கற பட்டாசு அதிகமாவும் வாங்கலாம். இந்த கிப்ட் பாக்ஸ் வந்து அதையெல்லாம் கெடுதிருச்சு. அவனே ரகத்துக்கு ஒண்ணா மொத்தமா டப்பால போட்டு வெச்சிருப்பான். 300 ரூபாய்க்கு நாம வாங்கினா, தீபாவளிக்கு போக மிச்சத்தை கார்த்திகைக்கு வெடிக்கலாம். அவ்வளவு பட்டாசு இருக்கும். ஆனா கிப்ட் பாக்ஸ்  வந்தப்பறம், 300 ரூபாய் கிப்ட் பாக்ஸ்ல ரெண்டு வாங்கினா கூட தீபாவளிக்கே பத்தாது.

பெரும்பாலும் நம்ம பர்ச்சேஸ் எல்லாம் தீபாவளிக்கு முந்தின நாள் தான். ஒரு தீபாவளிக்கு அப்பா ஏதோ வேலையா வெளியூர் போயிட்டாரு. அம்மா தான் கடைக்கு கூட்டிட்டுப் போனாங்க. புதுத்துணி-ல அத்தனை ஆசையில்லாத சமயம். பட்டாசு தான் ஈர்ப்பு. கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கு வாங்கி குடுத்தாங்க. அது பத்தலை-னு கடையிலேயே அடம்பிடிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணேன். முதுகுல ஒன்னு வெச்சு சொன்னாங்க, "உங்க பெரியப்பா பசங்களுக்கு 5 பேருக்கு சேர்த்தே 150 ரூபாய்க்கு தான் பட்டாசு வாங்கியிருக்காங்க. உனக்கு ஒரு ஆளுக்கு 300 ரூபாய்க்கு வாங்கி குடுத்தா பத்தலையா??" அது அப்போ புரியலை. மூஞ்சிய உம்முனு வெச்சுகிட்டு வீட்டுக்குப் போனேன்.


கொஞ்சம் வளந்தப்பறம் அப்பா ஒரு தடவை மதுரைக்கு கூட்டிட்டுப் போனாரு. அதுவும் தீபாவளிக்கு முந்தின நாள் தான். ராஜஸ்ரீ சுகர் மில் மேனேஜரோ யாரோ ஒருத்தர் வீட்டுக்கு ஒரு அப்பா வேலையா போகணும். மில்லுல இருந்து ஜீப் அனுப்பியிருந்தாங்க. அதனால என்னையும் கூட்டிட்டுப் போனாரு. அவங்க குடுக்கற பணத்துல தான் தீபாவளி பர்ச்சேஸ்.

வேலை முடிய சுமார் 6 மணி ஆயிடுச்சு. அங்கிருந்து கிளம்பி புதுமண்டபத்துக்கு வந்தோம். ஒரு நாலு கடையைப் பாத்துட்டு அப்பறமா துணிமணி வாங்கலாம்-னு முடிவு பண்ணோம். அப்படியே கோவிலை சுத்தி நடக்க ஆரம்பிச்சோம். 8 மணி இருக்கும். ஒரு பட்டாசு கடையில கிப்ட் பாக்ஸ் விலை கேட்டோம். பெரிய பாக்ஸ் 400 ரூபாய் சொன்னான். கொஞ்சம் யோசிச்சுட்டு, சரி வேற கடையில பாக்கலாம்-னு சொல்லி அப்பா கூட்டிட்டு போயிட்டாரு. ஆனாலும் அந்த கிப்ட் பாக்ஸ் வாங்கியிருக்கலாம்-னு சொன்னேன். கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப வருவோம். அப்போ வாங்கித்தரேன்-னு சொன்னாரு. எனக்கென்னவோ நம்பிக்கையில்லாம நடந்தேன்.

10 மணிவாக்கில் திரும்ப அதே கடைக்குப் போனோம். கஸ்டமர் தேடித் போயி கேட்டப்போ கூட தெனாவெட்டா பதில் சொன்ன கடைக்காரன் இப்போ வீதியில இறங்கி வந்து போற வர்றவங்களை எல்லாம் நம்ம கடைக்கு வாங்க.. நம்ம கடைக்கு வாங்க-ன்னு கையைப் புடிச்சு இழுக்காத குறையா கூவிட்டு இருந்தான். இப்போ போயி அந்த கிப்ட் பாக்ஸ் விலை கேட்டோம். ரெண்டு பாக்ஸ் 400 ரூபாய். டபுள் கிப்ட் பாக்ஸ். நாம டபுள் ஹாப்பி அண்ணாச்சி.


அப்பறம் தான் அப்பா சொன்னாரு.. இன்னும் 2 மணி நேரத்துல இவன் வியாபாரத்தை முடிச்சுட்டு கடையை ஏறக்கட்டினாத்தான் இவனுக்கு தீபாவளி. நேரம் ஆக ஆக, இருக்கற சரக்கை வித்துட்டு காசு பாக்கத்தான் நினைப்பான். அதனால தான் கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்-னு சொன்னேன். புரியுதா-னு கேட்டார். நல்லாவே புரிஞ்சுச்சு. அப்பறம் அங்க இங்க சுத்திட்டு வேடிக்கை பாத்துட்டு ஆரப்பாளையம் வந்து வண்டி ஏறும்போது மணி 11.30. வீட்டுக்குப் போகும்போது 2 ஆயிடுச்சு. கண் எரிய எரிய 5.30 மணிக்கு எழுந்து தலைக்கு எண்ணெய் வெச்ச கையோட அந்த கிப்ட் பாக்ஸ் பிரிச்சு ஒரு தீப்பெட்டி மத்தாப்பை கொளுத்தும்போது இருந்த சந்தோஷம் இருக்கே...

சென்னையில வேலைக்குப் போனதுக்கு அப்பறம் தீபாவளி-ன்னாலே கார்த்திக் வீடு தான். ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஆஜராகிடுவோம். செம ஜாலியா இருக்கும். அப்பா, அம்மா அண்ணன் அக்கா-னு எல்லாரும் இருக்கறதால, நம்ம வீட்லயே கொண்டாடற மாதிரி ஒரு சந்தோஷம். இதெல்லாம் தீபாவளி லீவு நாள்-ல வந்தா மட்டும் தான். இல்லாட்டி ஆசைதீர ஆபீசுக்குப் போயி, அங்க வந்திருக்கற நம்மளை மாதிரி பாவப்பட்ட ஜீவனுக்கெல்லாம் "ஹேப்பி தீபாவளி" சொல்லி கை குடுத்துட்டு சரவணபவன்-காரன் தீபாவளி ஸ்பெஷல்-னு சொல்லி குடுக்கற அதே அட்டு மீல்ஸை கொட்டிக்க வேண்டியது தான்.

பஹ்ரைன்-ல தீபாவளி கொண்டாடும்போது தமிழ் பூக்கடைக்காரர் ஒருத்தர் கொண்டு வர்றது தான் பட்டாசு. அவர் சொல்றது தான் விலை. குறைஞ்சது இந்திய மதிப்புக்கு 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினாலும் ஒரு சின்ன கேரிபேக்-ல போடற அளவுக்கு தான் இருக்கும். இங்க அரசாங்க கட்டுப்பாடு காரணமா வெடி மாதிரியான விஷயம் ஒன்னும் கிடைக்காது. எல்லாம் மத்தாப்பு தான். ஆனா பசங்களுக்கு அதை வெடிக்கும்போது இருக்கற அந்த சந்தோஷம் இருக்கே...

2 வருஷத்துக்கு முந்தி அவர் கடையில தீபாவளி சமயத்துல நடந்த தீ விபத்துல அவர் சம்சாரம் இறந்துட்டாங்க. 10-15 நாள் ஆஸ்பத்திரி-ல இருந்து தான் இவரே தேறி வந்தார். இப்போல்லாம் முந்தி மாதிரி மத்தாப்பு கூட கிடைக்கறதில்லை. ஆனா தீபாவளி சமயத்துல ராக்கெட், டபுள் ஷாட் மாதிரி ஒரு 20 அயிட்டம் உள்ள லிஸ்ட் எக்கச்சக்க விலையோட வாட்ஸாப்-ல வருது. ஆனா எங்க கிடைக்கும்-னு மட்டும் யாருக்கும் தெரியலை. யார் கிளப்பிவிட்ட புரளியோ தெரியலை. இந்த அயிட்டம் வெச்சிருக்கறது கூட ரெண்டாம் பட்சம் தான். இந்த மெசேஜ் அனுப்பினதுக்கே இந்த ஊர் போலீஸ் 3 வருஷம் உள்ள போட்டுட்டு, வெளிய வந்தவுடனே நாடு கடத்திடுவான். இல்லாத வெடிய அனுப்பின அந்த ஆசாமியைத்தான் நானும் தேடிட்டு இருக்கேன்...


இந்தியத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக திரைக்கே வராத திரைப்படங்களை கண்டுகளித்து, சாலமன் பாப்பையா-வையும் திண்டுக்கல் லியோனி-யையும் பார்த்து சிரித்து, புத்தாடை உடுத்தியதும் பிகர் இருக்கும் வீட்டு பக்கம் ஒரு ராஜ நடை நடந்து, அவள் பார்க்கும்போது வெடியை கையில் பிடித்து வீசி, ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து எங்கயும்(!!!) சுத்த போய்டாதே என சொல்லும் அப்பாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நண்பர்களுடன் தியேட்டர் சென்று முதல் நாள் முதல் ஷோ பார்த்து, இப்படியாக தீப ஒளித் திருநாளை கொண்டாடுவதற்கு மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் - தாய் நாடு வாழ் அனைவர்க்கும் இனிய ரியல் தீபாவளி வாழ்த்துக்கள்.

போனிலும் வீடியோ சாட்டிலும் சொந்தங்களுடன் வாழ்த்துக்களை பகிர்ந்து, தலைக்கு நல்லெண்ணெய் தேய்ச்சு குளிச்சியாப்பா என கேட்கும் அம்மா, புதுசு போட்டாச்சா என கேட்கும் அக்கா / தங்கை, அண்ணே நம்ம தெருவுல இன்னிக்கு நான் தான் முதல் வெடி வெடிச்சேன் என கூறும் தம்பி, எல்லாருக்கும் புதுத்துணி வாங்கியாச்சு இத்தனை ரூபாய் செலவு ஆச்சு என சொல்லும் அப்பா, நல்லா இருப்பா என்று ஆசிர்வதித்து 50 / 100 ரூபாய் செலவுக்கு தரும் தாத்தா / பாட்டி ஆகியோர் அருகில் இருப்பதாக நினைத்து, தொலைக்காட்சி செய்திகளில் வெடிக்கப்படும் வெடிகளின் கந்தக வாசனையை மூக்கு உணர்ந்துவிடாதா என்று ஏக்கங்களுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் - அயல் நாடு வாழ் அனைவர்க்கும் இனிய ரீல் தீபாவளி வாழ்த்துக்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2