YEZDI

YEZDI D250 CLASSIC

IND Suzuki வண்டியை விற்ற பிறகு அப்பா வாங்கிவந்த பைக் YEZDI. ரேஷன் கார்டில் பெயர் போடாத ஒரே குறை தான். மற்றபடி Yezdi-யும் கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒரு ஆள்.

பழைய படங்களில் ரஜினியையோ கமலையோ தேடிவரும் வில்லன் கூட்டம், கண்டிப்பாக Yezdi-ல் தான் வரும். சமயங்களில் ரஜினி கமலே கூட வருவார்கள். 2 ஸ்ட்ரோக், 250 சிசி திறன் கொண்ட வண்டி. சிறப்பம்சமே கிக்கரும், சைலன்சரும் தான். எனக்கு தெரிந்து இந்தியாவின் முதல் டபுள் சைலன்சர் வண்டி என்று நினைக்கிறேன். எத்தனை பாரம் வைத்தாலும் வறுமைக் குடும்பத்தின் தலைப்பிள்ளை போல அசராது ஓடும்.


தனியாக கியர் ராடு கிடையாது. பொதுவாக மற்ற வண்டிகளில் இடது பக்கம் கியரும், வலது பக்கம் பிரேக்கும் கிக்கரும் (வண்டியை ஸ்டார்ட் செய்ய) இருக்கும். Yezdi-யை பொறுத்தவரையில், வலது பக்கம் பிரேக் மட்டுமே. இடது புறம் உள்ள இரும்பு ராடை சற்றே உள்ளே அழுத்தி பின்பக்கம் நகர்த்தினால் அதுவே கிக்கர். வண்டி ஸ்டார்ட் ஆன பிறகு மீண்டும் முன்பக்கம் கொண்டுவந்த பிறகு அதுவே கியர்.

இப்போதிருக்கும் வண்டிகள் போல் ஒரே மிதியில் ஸ்டார்ட் செய்ய முடியாது. கொஞ்சம் பம்பிங் செய்ய வேண்டும். காலால் மேலும் கீழும் மிதித்து பம்ப் செய்து, பிறகு ஓங்கி ஒரு மிதி. வண்டி ஸ்டார்ட் ஆகும். புல்லட்டுக்கே பட்டன் ஸ்டார்ட் வந்துவிட்ட நிலையில் இந்த தலைமுறையினருக்கு அந்த அனுபவம் கிடைத்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.

மக்கர் செய்ய ஆரம்பித்தால் பேசாமல் அன்றைய பிளானை கேன்சல் செய்வது  நலம். ஸ்டார்ட் செய்வதற்கு மிதித்து மிதித்து தாவு தீர்ந்துவிடும். ஆனால் சரியான பிறகு வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் அந்த இரட்டை குழல் சைலன்சரில் வரும் அந்த சத்தம் (Rhythm) கேட்டால் போதும். மனமும் உடலும் பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்து பயணத்திற்கு தயாராகிவிடும். அதிலும் சைலன்சரில் பெரும்பாலும் பில்டர் வைத்திருப்பார்கள். பில்டர் இல்லாவிட்டால் வண்டியை முறுக்கும்போதெல்லாம் சத்தம் இன்னும் சிறப்பாக காதை கிழிக்கும். சரியான/முறையான பராமரிப்பில் இருக்கும் வரையில், Yezdi ஒரு பந்தயக் குதிரை தான்.


இன்னொரு சிறப்பம்சம் என்று சொன்னால், சக்கரம். மற்ற எந்த வண்டியிலும் இல்லாத வகையில், Yezdi-ல் சக்கரங்களை முன்னும் பின்னும் மாற்றிப் பொருத்தலாம். அதாவது, முன் சக்கரத்தை பின்னாலும், பின் சக்கரத்தை முன்னாலும் மாட்ட முடியும். இதனால் சில Yezdi பைக்குகளில் பம்பர் இருக்காது. அதற்கு பதிலாய், ஸ்டெப்னி சக்கரம் மாட்டியிருப்பார்கள் (என் அப்பா அப்படி தான் செய்திருந்தார்). ஸ்டெப்னிக்கு ஸ்டெப்னி, பம்பருக்கு பம்பர். எந்த சக்கரம் பஞ்சர் ஆனாலும் உடனே ஸ்டெப்னியை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடலாம்.

வண்டியில் எனக்கான பிரத்யேக இருக்கை, கேரியர். நால்வருமே செல்லும்போதெல்லாம் எனக்கு கேரியர் சீட் தான். ஆம், கேரியர் தான் சீட். சீட்டில் உட்கார்ந்து செல்வது போல் கேரியரில் முடியாது. இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்தால் கவிழ்ந்துவிடும் பயம் இருக்கும். எனவே ஒருபக்கமாக தான் உட்கார்வேன். ஒரு கை கேரியரைப் பிடித்தபடியே இருக்கும். வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்வதற்கு ஏற்ற இடம். ரோட்டில் பள்ளங்களில் இறங்கி ஏறும்போது போது மட்டும் கொஞ்சம் டண்டணக்கா...

ஒருமுறை நண்பர் வீட்டின் விசேஷத்திற்கு சென்று திரும்புகையில் 8 பேர் அமர்ந்து வந்தோம். பெரியவர்கள் நால்வர். சிறியவர்கள் நால்வர். டேங்கில் ஆரம்பித்து எனது கேரியர் இருக்கை வரை கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் வரிசையாக கை கால்கள்... செம்ம எக்ஸ்பீரியன்ஸ். வீட்டில் எத்தனை பிரச்சனை என்றாலும் (எனது கணக்குப் பாடம் உள்பட), எங்காவது வெளியில் வண்டியில் செல்கிறோம் என்றாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.


ஒருமுறை மதுரையில் நடைபெறும் ஒரு கல்யாணத்திற்கு Yezdi-யில் செல்வதாக ஏற்பாடு. கிட்டத்தட்ட பாதி தூரம் கடந்த நிலையில் வண்டியின் பின் சக்கரம் தீடிரென பஞ்சர். ஓடிக்கொண்டிருந்த வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் போகவே, தேசிய நெடுஞ்சாலையின் தரத்தை கொஞ்சம் சோதிக்க வேண்டியதாயிற்று. நல்லவேளை, அப்போது தங்கை பிறந்திருக்கவில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவில் இருந்ததால் எனக்கு பெரிய பாதிப்பில்லை. அம்மா கீழே விழுந்து புடவை வண்டியில் மாட்டிக்கொண்டதால் கொஞ்சம் இழுத்து வரப்பட்டார். அப்பாவும் நானும் ஒரு பத்தடி தள்ளி, வண்டியுடன் விழுந்தோம். பெட்ரோல் லீக் ஆனதால், வண்டியை தூக்கி நிறுத்தி ஸ்டான்ட் போட்டார் அப்பா. அதோடு சரி. தோள்பட்டை இறங்கிவிட்டது. கையை தூக்க முடியவில்லை. இதற்குள் அம்மா வந்துவிட்டார். எனக்கு ஒன்றுமில்லை என்பதறிந்து இருவரும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டனர். நல்லவேளையாக அடுத்த 10 நிமிடத்திற்கு இருபக்கத்திலிருந்தும் வண்டிகள் ஏதும் வரவில்லை.

ஆளரவமற்ற சாலை. அருகில் ஒரே ஒரு வீடு மட்டுமே. சத்தம் கேட்டு அந்த வீட்டு ஆட்கள் உடனே உதவிக்கு  ஓடி வந்தனர். அவர்களில் ஒருவர் வண்டியை நகர்த்த முயற்சித்தார்.. வண்டி நல்ல நிலையில் இருக்கும்போதே ஒருவரால் தள்ள முடியாது. இப்போது பஞ்சர் வேறு. அவரால் முடியவில்லை. வேறு ஒருவரையும் உதவிக்கு அழைத்து இரண்டுபேர் சேர்ந்து தள்ளிக்கொண்டு அந்த வீட்டிற்கு வந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு ஸ்டான்ட் போட்டு நிறுத்தினர்.   டாக்சி வைத்திருந்த அப்பாவின் நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வரச்செய்து அங்கிருந்து கிளம்பினோம். ஒரு மாதம் கழித்து கை சரியானவுடன் சென்று அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வண்டியை எடுத்து வந்தோம். மறக்கமுடியாத, பெரிய விபத்து என்றால் இது மட்டுமே.

பிறகு Yezdi எனக்கும் நண்பனானது. முதலில் ஸ்டார்ட் செய்வதற்கே நாக்கு தள்ளிவிடும். வண்டி வீட்டில் இருக்கும் சமயங்களில் ஸ்டார்ட் செய்து பழகுவேன். அந்த முயற்சி வெற்றியடையவே அடுத்தகட்ட முயற்சி, நானும் ஓட்ட கற்றுக்கொண்டேன். சைக்கிள் ஓட்டும்போது சொல்வார்கள், "கீழ விழுந்தாத்தான் கத்துக்க முடியும்" என்று. அப்படியே விழுந்தாலும் நமக்கு தான் பாதிப்பு. சைக்கிளுக்கு சொற்பமே அடிபடும்.

Yezdi-யும் அப்படியே. ஓட்டும்போது விடவும், ஸ்டான்ட் போடும்போது விழுந்தது தான் அதிகம். முதலில் உடைவது கண்ணாடியும் க்ளட்ச்/பிரேக் லீவர் தான். அதிகபட்சம் ஹெட்லைட் கண்ணாடி. ஆனால் நமக்கு.. அதிலும் கால் வண்டிக்கடியில் சிக்கிக்கொண்டால் கண்டிப்பாக சைலன்சர் தழும்பு உண்டு.

நான் பள்ளி முடித்து கல்லூரி செல்ல ஆரம்பித்த காலத்தில் அப்பாவுக்கு முதுகுத்தண்டு பிரச்சனை வர ஆரம்பித்தது. Yezdi-யின் ஷாக்கப்சர் (Shock Absorber/Suspension) ரொம்பவே ஹெவி. அத்தனை எளிதில் அசைந்து கொடுக்காது. எனவே அதிர்வுகள் அப்படியே முதுகுத்தண்டை பாதித்தது. அதுவே வலிக்கு காரணம் என்று தெரிந்ததால் அப்பா அரை மனதுடன் Suzuki Fiero வண்டி வாங்கினார். பிறகு அவ்வப்போது Yezdi-யை நான் ஓட்டுவேன். மைலேஜ் இல்லாத காரணத்தால் பெட்ரோல் போட பெரிய படஜெட் ஒதுக்கவேண்டும். அதனால் நான் ஓட்டுவதும் மொத்தமாக நின்றது. Yezdi பெரும்பாலும் புழக்கடையில் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கும்.
 
பிறகு மதுரையிலிருந்த அண்ணா (பெரியப்பா பையன்) அலுவலகம் சென்று வர வண்டி வேண்டும் என்றான். பெட்ரோல் செலவு ஒரு பிரச்சனை இல்லை என்றதால், Yezdi மீண்டும் புத்துயிர் பெற்று புதுப்பொலிவு அடைந்தது. ஒரு தீபாவளி சமயத்தில் அனைவரும் மதுரையில் தீபாவளி கொண்டாடுவதாக ஏற்பாடானது. அனைவரும் பஸ்ஸில் சென்றுவிட, நான் வண்டியை எடுத்துக்கொண்டு வருவதாக ஏற்பாடு. வண்டிக்கு பேப்பர்ஸ் எதுவும் இல்லாத/மறுபதிவு செய்யாத காரணத்தால் இரவு 10 மணிக்கு மேல் கிளம்பினால் போலீஸ் கெடுபிடிகள் இருக்காதென்பதால் 10.30-க்கு கிளம்பினேன். இரண்டரை மணிநேர பயணம். இருசக்கர வாகன நெடுந்தூர பயணங்களில் அதுவும் ஒன்று. அனைவருக்கும் அது ஒரு மகிழ்ச்சியான தீபாவளி.
 
அண்ணாவுக்கு வேறு ஊரில் வேலை கிடைக்கவே, வண்டியை கொண்டுவந்து விட்டுவிட்டான். Yezdi மீண்டும் புழக்கடையில் பரிதாபமாக. இம்முறை தூசி படிந்து துருப்பிடிக்கும் அளவுக்கு பரிதாபமாக. சரி.. விற்றுவிடலாம் என்று முடிவானது. ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. வந்தவர்கள் சொன்ன விலை கட்டுப்படியாகவில்லை. பழைய இரும்புக்காரன் கூட அதிக விலைக்கு எடுத்துக்கொள்வான் என்று ஒரு பேச்சுக்கு சொன்னது, உண்மையாகவே ஆகிப்போனது. ஆம்.. வண்டியை பழைய இரும்புக்கடைக்குத்தான் கொடுத்தோம். அப்போது அத்தனை பக்குவமில்லை. முதிர்ச்சியில்லை. அதனால் Yezdi போனதில், அதுவும் பழைய இரும்பாகிப்போனதில் எனக்கு பெரிய வருத்தமில்லை.
 
இப்போது அந்த டபுள் சைலன்சர் Rhythm எங்கே கேட்டாலும் நின்று வண்டி கடக்கும்வரை பார்த்து, எனது நினைவுகளை அசைபோடுகிறேன்... அந்த Rhythm கேட்கும் சமயங்களில், வண்டியை விற்றிருக்க கூடாது, அதுவும் பழைய இரும்புக்கடைக்கு விற்றிருக்கவே கூடாதென்று தோன்றும். மனதில் ஏதோ ஒன்று அழுத்துவது போல் தோன்றும்..
 
அதுவும் ஒரு ஓரமாக இருந்திருந்தால் என்ன பெரிய நஷ்டம் வந்திருக்கப்போகிறது???

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2