Posts

Showing posts from 2021

நடையா இது நடையா

Image
"உதிப்பன உத்தமர் சிந்தையுள்" என்பது போலே, இப்படியொரு சிந்தனை உதித்தது எந்த உத்தமர் சிந்தையிலோ?? என்ன சிந்தனையா... சொல்றேன். அதுக்கு முன்னாடி, இந்தப் பாசுரத்தோட 2வது அடியை  படிச்சுடுங்க. "ஒன்னலர் நெஞ்சமஞ்சிக் கொதித்திட * மாறி நடப்பன". இப்போ அடிமேல் அடி வெச்சு நடந்து போய் அந்த உத்தமர் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?   அஷோக்... இந்த நாள் உன்னோட காலண்டரில் குறிச்சு வெச்சுக்கோ. நீ எப்படி என் வீட்டை இடிச்சு... (மானே தேனே பொன்மானே) நடுத்தெருவுல நிக்க வெச்சியோ, அதே மாதிரி உன்னையும் ஒருநாள் நடுத்தெருவுல நிக்க வெக்கல, என் பேர் அண்ணாமலை இல்லேடா... என்று ரஜினி சொன்ன டயலாக்கை யார் மீதோ இருக்கும் கடுப்பில், மொத்த பில்டிங்கையும் பார்த்து சொன்னது மட்டுமில்லாமல், நடுத்தெருவில் நிறுத்தியும் விட்ட அந்த மனிதருள் மாணிக்கம்... யாருன்னு தெரிஞ்சா, எனக்கும் சொல்லுங்க.   இந்த வருட சத்சங்க விளையாட்டுகளில் நடைப்பயிற்சியும் இருப்பதாக அறிவித்தனர். அறிவிப்பாளர்களே அசந்துபோகும்படி, அனைவரும் அளித்த அபாரமான பங்களிப்பு... அடேங்கப்பா லெவல். எல்லாரும் 1-2 நாட்கள் நடந்து தோராயமாக 15 முதல் 20 ஆயிரம் ஸ்டெப்கள்

இதிலுமா வேகம் சௌந்தர் சார்???

Image
சௌந்தர் சாரும் குடும்பமும் இதற்கு முன்பே பஹ்ரைனில் இருந்திருந்தாலும், இப்போது திரும்பி வந்திருந்த இந்த 2 வருடங்களாகத் தான் எனக்குப் பரிச்சியம். இதற்கு முன் இருந்தபோது, அவருடைய அக்காவும் அவர் குடும்பமும் கூட பஹ்ரைனில் தான், சொந்தமும் நட்பும் புடைசூழ இருந்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பலர் நிரந்தரமாக இந்தியாவுக்கு செல்ல, சௌந்தர் துபாய் சென்று சிலகாலம் கழித்து, அங்கிருந்து இந்தியா சென்றுவிட்டார். 2 வருடங்களுக்கு முன்பு, மீண்டும் துபாயில் வேலை. அங்கு சேர்ந்த சில மாதங்களில், ட்ரான்ஸ்பரில் பஹ்ரைனுக்கு வந்தார்கள். சத்சங்கத்திற்கு வர ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருடனும் பழக ஆரம்பித்தாலும், யாருடனும் அத்தனை நெருக்கம் பாராட்டவில்லை. இன்னும் சில காலத்தில் சத்சங்கத்தில் இருக்கும் குழந்தைகளிடம் சௌந்தர் சாருக்கு கொஞ்சம் ஈடுபாடு உண்டானது. அதிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் அத்தனை பாசமாக விளையாட ஆரம்பித்தார். சுஜாதா மேடமும், வம்சியும் (கவிதார்கிக சிம்மன்) கூட கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தார்கள். வம்சி அவன் வயதிற்கு ஏற்ற நண்பர்கள் சத்சங்கத்தில் யாரும் இல்லையென்றாலும், மற்ற சிறு

அது ஒரு கொரோனா காலம்

Image
ஆதி மனிதனின் கற்காலம்.. சில பல அரசர்களின் பொற்காலம்.. வரிசையில், எதிர்வரும் ஆண்டுகளில் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் இந்த கொரோனா காலம். அப்படி என்ன விசேஷம் என கேட்பவர்களுக்கு, அப்படி என்ன இல்லையென நாக்குமேல பல்லைப் போட்டு கேட்குமளவுக்கு எச்சகச்ச விசேஷங்கள் இருக்கிறது இந்தக் கொரோனா காலத்தில். கொரோனா தொற்று வராதவர்களுக்கு பல பிரச்சனைகள் என்றால், நோய்த்தொற்று வந்தவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுடன் சேர்த்து இன்னும் ஒரு பிரச்சனை... அவ்வளவே. லாக்-டவுன், சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தம், உள்ளூரில் சிலபல கிலோமீட்டர் சுற்றளவுக்கு மேல் செல்ல தடை, மார்க்கெட் மூடல், டாஸ்மாக் மூடல், ஒர்க் ப்ரம் ஹோம், அதுவும் கணவன் மனைவி இருவருக்கும் ஒர்க் ப்ரம் ஹோம், குழந்தைகளுக்கு ஆன்லைன் ஸ்கூல்.. இதையெல்லாம் தாண்டி கைக்கு க்ளவுஸ்.. முக்கியமாக முகத்துக்கு/மூக்குக்கு மாஸ்க். மாஸ்க் போடுவது என்ன அவ்வளோ பெரிய பிரச்சனையா என்று நினைக்க வேண்டாம். காற்று போகும் அளவுக்கு லூஸாகவும், கொரோனா கிருமி போக முடியாத அளவுக்கு டைட்டாகவும், நாசித் துவாரத்துக்கு குறைந்தது ஒன்னரை இன்ச் மேலே தொடங்கி

ஜன்னலோரம்... 4

Image
எட்வின் பாட்டில் பாட்டிலாக குடித்தான். Bar-க்குள் மதியம் நுழைந்தவன், இரவு வெகு நேரமாகியும் குடியை நிறுத்தியபாடில்லை. ஒரு கட்டத்தில் அங்கிருந்த ஊழியர்கள் இவன் அளவுக்கு மீறி குடித்துவிட்டதை சொல்லி, இனியும் பாட்டில் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். கோபத்தில் அவர்களை வாய் குழற திட்டிக்கொண்டே எழுந்துவன், நிற்கக்கூட முடியாமல் தட்டுத்தடுமாறி சேர்களை எல்லாம் தள்ளிவிட்டு கீழே விழுந்தான். அங்கிருந்தவர்கள் இவனை கைத்தாங்கலாக வெளியே கூட்டி வந்து ஒரு டாக்சியில் ஏற்றிவிட்டனர். "Navy ஆபீஸ்" என்று இவன் குழறியதை எப்படியோ புரிந்துகொண்டு ட்ரைவர் வண்டியை விட்டான். தள்ளாடியபடி உள்ளே நுழைந்தான். நேராக Arms ரூமுக்கு போனான். அங்கிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது சக ஊழியர் ஒருவர் பார்த்து இவனை தடுக்க முயல, குடிவெறியில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அவரை முட்டிக் கீழே தள்ளி சுட்டுவிட்டான். நல்லவேளையாக வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்ததால் உயிர் போகவில்லை. இதற்குள் சத்தம் கேட்டு பயந்த டாக்சி ட்ரைவர், இவன் துப்பாக்கியுடன் வருவதைப் பார்த்து வண்டியை கிளப்ப முயல

ஜன்னலோரம்... 3

Image
ஒரு நாள் அலுவலகத்தில் லேட்டாகிவிட, நள்ளிரவுக்கு மேல் வீட்டிற்குப் போக முடியாமல் ஆபீஸிலேயே இருக்க நேரிட்டது. எப்போது தூங்கினான் என்றே தெரியாது. தன் ஆபீஸ் சேரில் டேபிள் மேல் கால் நீட்டி தூங்கிவிட்டான். காலையில் ஆபீஸ்-பாய் வந்து எழுப்பியவுடன் திடுக்கிட்டு விழித்தான். ஆபிஸேலேயே சும்மா பேருக்கு பல் துலக்கிவிட்டு, வீட்டிற்கு வரும் வழியில் ஹோட்டலில் காலை டிபன் முடித்துவிட்டு வந்தான். படுத்தான். அவ்வளவு தான் தெரியும். முழித்துப் பார்க்கும்போது மாலை 5.30 மணி. ஒரு டீ-யை போட்டுக்கொண்டு வந்து ஜன்னலருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டே உறிந்தான். ஊருக்குப் பேச நினைத்து போனை எடுத்து நோண்டிக் கொண்டிருக்கும்போது தான் நேற்றிலிருந்து வயிற்றுவலி இல்லாதது நினைவுக்கு வந்தது. ஒருவேளை இந்த வீட்டில் தான் பிரச்சனை இருக்குமோ என்று தோன்றிய அந்த நிமிடம், லேசாக பயமும் ஒட்டிக்கொண்டது.   சோதித்துப் பார்க்க முடிவு செய்து, மேனேஜரிடம் பேசி அன்று மட்டும் நைட் ஷிப்டுக்கு அனுமதி வாங்கினான். ஆபீஸ் போய்விட்டு மறுநாள் காலை வீட்டிற்கு வந்தான். படுத்தான். தூங்கினான். வயிற்றுவலி இல்லை. அடுத்த 2 நாளும் வாரயிறுதி விடும

ஜன்னலோரம்... 2

Image
ராஜவேல் இருந்த வீட்டில் இதற்கு முன் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு ஜோடி இருந்தார்கள், மார்க்கோ - மிக்கேலா. கல்யாணம் கட்டிக்கொண்டு ஓடிப்போகவோ அல்லது ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கொள்ளவோ அவசியம் இல்லாத அளவுக்கு லிவிங் டு-கெதர் வகையறாவில் ஊறித் திளைத்தவர்கள் அந்நாட்டவர்கள். அந்த தேசத்திலிருந்து வந்த இந்த இருவரும் அப்படியான லிவிங் டு-கெதர் வகையறாதான் என்பது இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும்.   உனக்காகவே நான் எனக்காகவே நீ என்று வீட்டு சாப்பாட்டோடு வாழ்ந்தாலும், அவ்வப்போது இருவரும் தனித் தனியே ஹோட்டல் சாப்பாடும் சாப்பிட்டு வந்தனர். கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்பது இந்த விஷயத்தில் இருவருக்கும் வசதியாகவே இருந்தது. மார்க்கோவுக்கு ஊரில் கல்யாணமாகி 2 வயதில் ஒரு குழந்தை இருந்தது. இது மிக்கேலாவுக்கும் தெரியும். ஆனாலும் சொந்த ஊரை விட்டு வந்தது முதல் டிசைன் டிசைனான கஷ்டங்கள் பலவற்றையும் அனுபவித்து வாழ்வில் பக்குவப்பட்டு விட்டதால், இந்த ஷேரிங் வீட்டில் கேரிங்கோடு இருந்தார்கள். விதி-யின் உருட்டு அப்படி.   மிக்கேலாவுக்கு கல்யாணம் எதுவும் நடந்ததில்லை... ஒருமுறை கூட. அவளுக்கு அதில் நம்பிக்கையுமில்லை.

ஜன்னலோரம்... 1

Image
ராஜவேல் புதிய வேலை கிடைத்து இந்த ஊருக்கு வந்திருந்தான். ஊர் மட்டுமல்ல நாடே புதியது தான். பிளைட் ஏறுவது என்னவோ பழகிப்போன ஒன்று என்றாலும் வெளிநாடு செல்வது இதுவே முதல்முறை. முதன்முதலில் தன் சொந்த ஊரான கருமாத்தூரை விட்டு சென்னை போனதுவே சாதனை தான். பள்ளிக்கூடம், காலேஜ் எல்லாமே கருமாத்தூர் தான். புனித கிளாரட் ஸ்கூல் பிறகு அருளானந்தர் காலேஜ். வாராவாரம் திருப்பரங்குன்றம், மாதம் ஒரு தடவையோ 2 தடவையோ மதுரை. இவ்வளவு தான் அதிகபட்சம் அவன் வெளியே சென்றது. சென்னையில் வேலை கிடைத்துக் கிளம்பும்போது அவன் அம்மா "எம்புள்ளைக்கு இந்த ஊரை விட்டா எதுவும் தெரியாதே.. திக்கு தெரியாத ஊர்ல எப்படிப் பொழைக்கப் போகுதோ.. எய்யா வேலு நீ போகவேணாம் ராசா" என்று அழுது அரற்ற, வீதியே திரண்டுவிட்டது. அழகர் கோவிலுக்கு குடும்பத்துடன் போய், பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு படையலிட்டு, வானுக்கும் மண்ணுக்குமாய் நிற்கும் அரிவாள்களைத் தொட்டு, அங்கேயே கயிறு (தாயத்து) வாங்கி இவனுக்கு கட்டிய பிறகு தான் கொஞ்சம் தெம்பாயிருந்தாள். அப்பா சமாதானப்படுத்தி இவனை அனுப்பிவைத்தார். அவருக்கும் உள்ளூரக் கொஞ்சம் கலவரம் தான் என்றாலும்