அநாதைப் பணம்

குமரவேல், இப்போது அவன் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாமானியன். ஒரு காலத்தில் அவனது குடும்பத்திற்கு பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இருந்தது. அவனது தாத்தா ஞானவேல். அவரது பேரைச் சொன்னலே ஊரில் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்தவர். பல ஏழைப் பெண்களின் கழுத்தில் தாலி ஏறியதே அவர் செய்த பொருளுதவியால் தான். பிறருக்குக் கொடுத்தும், சொந்தங்களால் ஏமாற்றப்பட்டும் சொத்துக்கள் கரைந்தன.

குமரவேலின் தந்தை சக்திவேலின் காலத்தில் ஒரு சிலவற்றைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களும் போய்விட்டது. இதனால் தந்தை செய்துவந்த தான தர்மங்களை சக்திவேலால் தொடர முடியவில்லை. குமரவேல் பிறந்த பிறகு கஷ்ட ஜீவனம் தான் என்ற நிலை. சில வருடங்களில் தொழிலில் வந்த லாபத்தால் கஷ்டத்திலிருந்து மீண்டு, ஓரளவுக்கு நல்ல நிலையை அடைந்தார் சக்திவேல். ஆனால் மனைவியின் புற்று நோய் செலவிற்கே அவரது வருமானம் சரியாக இருந்தது. இவரிடமிருந்த பணத்தைக் கொண்டு சிலகாலம் தான் மனைவியின் மரணத்தை தள்ளிப் போட முடிந்தது. அம்மா இறந்த பிறகு குமரவேலுக்கு எல்லாமே சக்திவேல் தான்.

தாத்தாவின் சொத்துக்கள் கிடைக்கவில்லையே தவிர குமரவேலுக்கு அவரது குணங்கள் அப்படியே இருந்தது. பள்ளி படிக்கும் காலத்திலேயே யாரவது சக மாணவன் சாப்பாடு கொண்டு வரவில்லையென்றால் இவன் தனது சாப்பாட்டைக் கொடுத்துவிடுவான். சக்திவேல் எவ்வளவோ சொல்லியும் பிறருக்கு உதவும் இந்த குணத்திலிருந்து அவன் சிறிதும் மாறவில்லை. இவனையும், இறந்துவிட்ட மனைவியையும் நினைத்தே அவரின் உடல்நிலையும் கெட்டது. அதே புற்று நோய்.

சக்திவேலின் மறைவால் பள்ளிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்க முடியாமல் போனது. அவனுக்கு ஆதரவளிக்க யாரும் முன் வரவில்லை. சேரக் கூடாத சகவாசங்கள் தான் அவனை வளர்த்துவிட்டன. வளர்ந்தது அவன் மட்டுமில்லை. அவனது க்ரைம் ரேட்டும் தான். இதனால் பலமுறை ஜெயிலுக்கு விஜயம் செய்திருக்கிறான். லத்தி ட்ரீட்மெண்ட் மட்டும்தான் கொஞ்சம் அலர்ஜி. ஆனாலும் பிறருக்கு உதவி செய்வதற்க்காக ராபின் ஹூட் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டுதானிருந்தான்.

இப்போதும் கூட ஒரு ஏழைச் சிறுமியின் புற்று நோய் சிகிச்சைக்குத் தேவையான பணத்தைப் புரட்டிக்கொண்டு(!) திரும்பிக் கொண்டிருந்தான். கத்தையாக கையிலிருக்கும் பணத்தைக் கொண்டு எப்படியும் அவளை புற்று நோயிலிருந்து காப்பற்றிவிடலாம் என நம்பினான். சீக்கிரம் செல்ல வேண்டுமென எண்ணியவாரே ஆக்சிலேட்டரை இன்னும் கொஞ்சம் முறுக்கினான்.

ஹைவேசில் போலீஸ் போட்டு வைத்திருந்த தடுப்புகளைத் தகர்த்தெறிந்து அவர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு சிட்டாகப் பறந்த கடத்தல் அரிசி லாரியை எப்படியாவது மடக்கிப் பிடித்துவிடும் எண்ணத்தில் ஹைவே-பாட்ரோலின் குவாலிஸ் சீறிக்கொண்டிருந்தது.

எதிரே ஒரு லாரி தாறுமாறாக வருவதைப் பார்த்து சுதாரித்து வண்டியை ரோட்டைவிட்டுக் கீழே இறக்கிவிட்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி இவனைக் கடந்து சென்றது. பிறகு மீண்டும் ரோட்டிற்கு வந்து வண்டியைச் செலுத்தினான். லாரியைத் திரும்பிப் பார்துக் கொண்டே சாலையின் வலது பக்கம் வந்துவிட்டான். சட்டென்று அந்தத் திருப்பத்தில் அதுவும் சாலையின் வலது பக்கம் இவனை எதிர்பார்க்கவில்லை போலீஸ் வண்டியின் டிரைவர். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குவாலிஸ் மோதிய வேகத்தில் பல அடி தூரம் தூக்கியெறியப்பட்டு, அந்த இடத்திலேயே துடித்து இறந்தான். அவனது பைக், அந்தப் பை, அதிலிருந்த பணம், இப்போது ஆதரவற்றுக் கிடந்தது. அநாதையாக...

Comments

  1. புரியலை.......என்ன சொல்ல வர்றீங்க!..........

    ReplyDelete
  2. அந்தச் சிறுமிக்கு உதவி செய்ய வேண்டி இவன் புரட்டிய பணமும் இவனைப் போலவே அநாதையாய் போனது

    ReplyDelete
  3. நாம் பேசியபோது கிடைத்த இரு வார்த்தை.. கதையானது.. சபாஷ்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2