சப்பாத்தி

இளநிலைக் கல்லூரி நாட்களில் எனது டிபன் பாக்ஸ் மிகப் பிரபலம். எனது அம்மா செய்து தரும் சப்பாத்திகளுக்காக. சப்பாத்தி அத்தனை மெதுவாக இருக்கும். அதற்கு சைட்-டிஷ் பெரும்பாலும் உருளைக் கிழங்கு குருமாவக  இருக்கும். சாப்பிட்ட பிறகு 2 - 3 மணி நேரமாவது அந்தக் குருமா வாசனை கையில் இருக்கும். சப்பாத்தி கொண்டு செல்லும் நாட்களில் அதை நான் சாப்பிட்டதாக எனக்கு நினைவேயில்லை.

சக மாணவர்களின் டப்பாக்களை லவட்ட ஒரு குழுவே இருக்கும். இதன் தலைவர் விக்கி என்கிற விக்னேஷ். பிரேம், சண்முகம், முத்துராஜா, ராஜாக்கண்ணு, ஆறுமுகம், ஜெயபாலன், பாரி இவர்களெல்லாம் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள். சிலர் அவ்வப்போது மட்டும் உறுப்பினராவார்கள். 3வது / 4வது ஹவரின்போதே அவர்கள் கட்சிப் பணியை ஆரம்பித்து விடுவார்கள். முதலில் மாட்டுவது பிரசாத்தின் டப்பாவாகத் தானிருக்கும். அவன் தினமும் முட்டை கொண்டு வருவான். இது அவனுடன் பள்ளியில் படித்த விக்கிக்கு தெரியும். அதனால் அவனது முதல் குறியே பிரசாத்தின் டப்பா தான்.

அடுத்ததாக மாட்டுவது மதிவாணனின் டப்பா. அவன் கொண்டுவரும் ஆனியன் ரைஸ், எனது சப்பாத்தியைப் போல அத்தனை பிரபலம். ஆனியன் ரைஸ் கொண்டு வந்திருந்தால், அவன் அன்றைக்கு கேண்டீனில் சிங்கப்பூர் மெஸ் கொண்டுவரும் காய்ந்த புரோட்டாவையும், பாடாவதி சால்னா(குருமா)வையும் தான் சாப்பிட வேண்டும். டப்பாவைப் பறி கொடுத்த யாருக்குமே அதே கதி தான்.

ஆரம்பத்தில் பிரசாத் டப்பாவில் மேலாக முட்டை இருக்கும். வேலை சுலபமாக முடிந்து விடும். மதியம் சாப்பிட டப்பாவைத் திறக்கும்போது, முட்டை இருந்த இடத்தில் முட்டைக்கு பதில் "ஓட்டை" தான் இருக்கும். அதைப் பார்த்துவிட்டு திருடித் தின்றவனைக், கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவான். விக்கியோ அல்லது அவனது குழுவோ எதுவுமே நடக்காதது போல, அவரவர் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

சில நாட்கள் கழித்து பிரசாத்தின் டப்பாவில் முட்டை இருப்பதில்லை. ஆனால் அவன் சாப்பிடும்போது மட்டும் திடீரென்று முட்டை வரும். எப்படியென்று எல்லாரும் யோசித்தனர். ஆனால் ஒருவருக்கும் சூட்சமம் பிடிபடவில்லை. கடைசியில் அந்தக் குட்டை உடைத்தது சண்முகம் தான். ஒரு நாள் பிரசாத்தின் டப்பாவை எடுத்து ஒரு விரலை உள்ளே விட்டான். அடியில் முட்டை இருந்ததைக் கண்டுபிடித்து விட்டான். முட்டையை வைத்து அதன் மேல் சாப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறான் பிரசாத். பிறகென்ன, மீண்டும் முட்டை காணாமல் போகும். மீண்டும் திட்டுவான். இது வாடிக்கையாகிவிட்டது.

இவர்களது லவட்டல் வேலை தெரியுமாதலால், நான் சப்பாத்தி கொண்டு வரும் நாட்களில் மிகவும் கவனமாக டப்பாவைப் பாதுகாக்க வேண்டியிருக்கும். ஆனாலும் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பேச்சுக் கொடுப்பது போல பேசிவிட்டு டப்பாவை லவட்டி விடுவார்கள். இது மாதிரி பேச்சுக் கொடுத்து, சிந்தனையைத் திசை திருப்பி, டப்பாவை லவட்டும் வேலைகளில் முத்துராஜா, ஜெயபாலன், ஆறுமுகம் மூவரும் தேர்ந்தவர்கள். பிரசாத்தின் டப்பாவாவது முட்டை எடுத்த பிறகு தடம் தெரியாமல் அவனது பைக்குள் சென்றுவிடும். ஆனால் என் டப்பா திரும்ப வரவே வராது. சாப்பிட்டுவிட்டு வேறு யார் டேபிளிலாவது வைத்து விடுவார்கள். சில சமயம் பக்கத்து க்ளாசில் வைத்து விடுவார்கள். அப்போதான், யார் சாப்பிட்டார்கள் எனத் தெரியாமல் குழம்பி விடுவோமாம். சில சமயம் அது மாதிரி குழம்பியதும் உண்டு.

ஆறுமுகத்தின் டப்பாவை மட்டும் யாரும் எடுக்க மாட்டார்கள். குழு உறுப்பினர் என்பதற்காக எல்லாம் கிடையாது. பெரும்பாலும் அவன் இட்லியும், தொட்டுக்க இட்லியும் கொண்டு வருவான் என்பதால். ஆம். இட்லி, தொட்டுக்கவும் இட்லி. அவன் சற்று தொலைவான ஊரிலிருந்து வருகிறவனாகையால், சில வகை சாப்பாடுகள் மதியத்திற்க்குள் கெட்டு விடும். ஆனால், இட்லி கெடாது என்ற காரணத்தால், அவனது டப்பா இட்லியால் நிரம்பி வழியும். யாரும் நல்ல ரெஸிப்பிகள் கொண்டுவராமல் போகும் நாட்களில், அந்த இட்லிக்கும் கூட சில சமயம் அடிதடி நடந்திருக்கிறது.

எல்லாருடைய டப்பாக்களும் மதியத்திற்குள் காலியாகிவிட்டால், மதிய சாப்பாட்டிற்கு ஹாஸ்டலுக்குப் போய்விடுவோம். ஜெயக்குமார், ஹாஸ்டலில் தான் தங்கியிருந்தான். ஹாஸ்டல் மெஸ்சில் வெளியாட்களுக்கு சாப்பிட அனுமதி கிடையாது. எனவே, நாங்கள் எல்லாரும் ஜெயக்குமாரின் ரூமில் இருப்போம். அவன் சாப்பிட்டு முடித்து, அவனது தட்டில் முடிந்த அளவுக்கு சாப்பாட்டை போட்டு, யாருக்கும் தெரியாமல் எங்களுக்கு எடுத்து வந்துவிடுவான். ஒரே ஒரு பெரிய தட்டு சாப்பாடு. அதிலேயே சாம்பார், ரசம் எல்லாம் ஊற்றி எடுத்து வருவான். அது எல்லம் கலந்து ஒரு வித்தியாசமான ருசியில் இருக்கும். அதற்கு 5 - 6 பேர் இருப்போம். ரகளையே நடக்கும். பெரும்பாலும் அதிகம் சாப்பிட்டது விக்கியாகவோ, ஜெயபாலனாகவோ தானிருக்கும். நாங்கள் சாப்பிட்டுக் கிளம்பியபிறகு, அந்த ரூமே ஒரு கலவர பூமியாக காட்சியளிக்கும்.

இப்போது, அந்த நண்பர்கள் எல்லாரும் அவரவர் வேலை நிமித்தம் பல ஊர்களில் பல நாடுகளில் இருக்கிறார்கள். சப்பாத்தி சாப்பிடும்போதோ, பந்தியில் சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே ரசம் ஊற்றி விட்டாலோ, நண்பர்கள் யாராவது அவித்த முட்டை சாப்பிடும்போதோ, ஆனியன் ரைஸ் / பிரைடு ரைஸ் சாப்பிடும்போதோ எனது கல்லூரிக் காலமும் நாங்கள் போட்ட ஆட்டமும் நினைவுக்கு வரும். சான்ஸே இல்லை. இனி அப்படியொரு காலம் வாழ்வில் வரவே வராது. சக மாணவர்கள் எல்லாரையும் ஒரு சேர திரும்பப் பார்ப்பதே நடவாத ஒன்றாகத் தான் தோன்றுகிறது. அந்த நினைவுகளை மட்டும் அசை போட்டுப் பார்த்து ஆனந்தப் பட வேண்டியது தான், சப்பாத்தி குருமா சாப்பிடும்போதெல்லாம்.

Comments

  1. என் கல்லூரி நாட்களை மீண்டும் உசுப்பி விட்டது!.....சப்பாத்தி!........
    பொதுவாகவே நாம் எல்லோரும் இப்படிப்பட்ட கல்லூரி நாட்களையே கடந்து வந்திருக்கிறோம்!...என் டிபன்பாக்சை இன்னொருவன் கபளீகரம் செய்ததால் அன்று ஏற்பட்ட பசி இன்னும் எனக்குள் இருக்கிறது!....
    பிழைப்பு என்னும் கொடிய கரம் நட்பு வட்டாரத்தையே சிதைத்து விட்டது!....மீண்டும் ஏனோ அந்த நாட்கள் வரவே மாட்டேனென்கிறது!

    ReplyDelete
  2. Dai dai oru sapathi iku ivalu pora periya akkaporala iruku. internet la pottu nabaka paduthiriya illa un sapathi saptta thiku kannaku katturaya.irunthalum antha taste marakamudiayathu da

    Appadi kelu da, koomoottai thalaiya prasath. idhu irrukkae vellaiya moottai madhri, idhu paer thaan 'Mantle'.

    ReplyDelete
  3. இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா (கண்ணு) வேணும்கிறது

    ReplyDelete
  4. Satthiya sodanai!!!!

    Mummy Daddy Edavadhu chapathi Erundha Kodunga Appa..

    "So sad!

    ReplyDelete
  5. Pasakara payaluka vittutu sapdavae matanga!!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2